ஆர்.எஸ்.புரத்தில் தயார் நிலையில் மல்டிலெவல் பார்க்கிங்!

கோவை ஆர்.எஸ்.புரம் டிபி சாலையில் கட்டப்பட்டு வந்த மல்டி லெவல் கார் பார்க்கிங் பணி நிறைவு பெற்றுள்ளது.

கோவையில் நாளுக்குநாள் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தும் வழக்கத்தை மாற்றும் விதமாக ஆர்.எஸ்.புரம், டவுன்ஹால் உள்பட 4 இடங்களில் மல்டிலெவல் வாகன நிறுத்துமிடம் மாநகராட்சி சார்பில் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதில் முதற்கட்டமாக ஆர்.எஸ் புரம் டி.பி சாலையில் ரூ.42 கோடி செலவில் மல்டி லெவல் பார்க்கிங் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்தநிலையில், மல்டி லெவல் பார்க்கிங் பணி நிறைவு பெற்றுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கோவை ஆர்.எஸ்.புரத்தில் ரூ.42 கோடி செலவில் 370 கார்கள் நிறுத்தும் வகையில் 4 அடுக்கு கொண்ட மல்டிலெவல் வாகன நிறுத்துமிடம் கட்டும் பணி இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. 99 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்த பார்க்கிங்கில் அனைத்தும் சென்சார் அடிப்படையில் தானியங்கி முறையில் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நவீன ஹைட்லாலிக்ஸ் இயந்திரம் பொருத்தப்படுகிறது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது என்றனர்.