நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி எஸ்.எப்.ஐ ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் (17.09.2021) நடத்தினர்.

தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே நீட் தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. தேர்வு பயம் மற்றும் தேர்வு முடிவு பயம் காரணமாக மாணவர்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டு, சிலர் உயிரை மாய்த்துக்கொள்ளும் சோக சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இதனால் இத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்

இதன் ஒரு பகுதியாக கோவையில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்வு என்ற பெயரில் மாணவர்களின் உயிரை மத்திய அரசு பறித்து வருவதாகவும், உடனடியாக தேர்வை ரத்து செய்யக்கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.