5 சவரன் வரையிலான நகைக் கடன்கள் தள்ளுபடி – முதல்வர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையின் இறுதி நாளான இன்று, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவுப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகையை அடகுவைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

ரூ.6 ஆயிரம் கோடி அளவிற்கான நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன் பெரும் வகையில் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேரவையில் பேசிய முதல்வர், ஒருசில இடங்களில் முறைகேடாக நகைக்கடன் பெற்றுள்ளார்கள். அதேபோல் ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் நடைக்கடன் வாங்கியுள்ளார்கள். இதெல்லாம் களையப்படும் என்றும் உண்மையான பட்டியல் ஏற்கனவே சேகரிப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும், கூட்டுறவு சங்கம் சார்பாக யாருக்கெல்லாம் கடன் தள்ளுபடி என்ற விவரம் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினார். முதலமைச்சரின் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு, திமுக தேர்தல் வாக்குறுதியில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.