நாளை நிறுவனங்கள் விடுமுறை விட அவசியம் இல்லை – மாவட்ட ஆட்சியர்

கோவையில் நாளை (12.09.2021) மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுவதை முன்னிட்டு நிறுவனங்கள் நாளை விடுமுறை விடத் தேவையில்லை என்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்

கோவையில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுவதை முன்னிட்டு கோவை மாவட்ட கண்காணிப்பாளர் சங்கர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிறப்பு முகாமில் 1.5 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 1475 முகாம்களில் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது.

ஒவ்வொரு மையத்திற்கும் ஒரு தடுப்பூசி செலுத்துபவர், ஒரு டேட்டா ஆபரேடர் என 2,980 பேர் பணியில் ஈடுபடுவர். ஒவ்வொரு மையத்திற்கும் மக்களை அழைத்துவர 2 பேர் வீதம் 2959 அங்கன்வாடி பணியாளர்களும், இந்த பணிகளை கண்காணிக்க 338 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வணிக நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை முகாமிற்கு அழைத்துச்செல்ல வேண்டும் எனக் கூறினார்.

நாளை பல்வேறு நிறுவனங்கள் விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் பதிலளிக்கையில், “ஊரகப்பகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெறும். ஏதேனும் ஒரு சிப்ட் அடிப்படையில் ஊழியர்களை முகாமிற்கு அழைத்துச் செல்லலாம். விடுமுறை விட அவசியம் இல்லை.” என்றார்.