“கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதி அளியுங்கள்” – சென்னை உயர்நீதிமன்றம்

வெளிநாடுகளில் தானியங்கி இயந்திரங்கள் மூலமாக மனித கழிவுகள், சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணிகள் செய்யப்படுகிறது. ஆனால் இந்தியாவில் பல ஆண்டு காலமாக மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றது.

நாடு முழுவதும் கையால் மலம் அள்ளும் தொழில் மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணிகளை செய்ய சுமார் 2 லட்சம் குடும்பத்தினர் உள்ளதாக கூறப்படுகிறது. நாட்டில் தொழில்நுட்பங்கள் எவ்வளவுதான் வளர்ந்துவிட்டாலும், மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் இன்னமும் பல இடங்களில் மனிதர்கள் தான் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ஏராளமானோர் விஷவாயு உள்பட பல்வேறு விபத்துக்களிலும் சிக்கி உயிரிழந்து வரும் அவலங்களும் அரங்கேறி வருகின்றன.

துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் என சேர்த்து தமிழகத்தில் சுமார் 50 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களைக் கொண்டு, கழிவுநீர்க் குழாய்கள் மற்றும் தொட்டிகளுக்குள் மனிதர்களை இறக்கி வேலை வாங்கக் கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தாலும், அதிகாரிகள் மனிதர்களைக் கொண்டே பணிகளை செய்து வருகின்றனர்.

கடந்த 2013ம் ஆண்டு முதல் டிசம்பர் 2018 வரை நாடு முழுவதிலும் 323 துப்புரவு தொழிலாளர்கள் இதுபோன்ற பணிகளின்போது உயிரிழந்து உள்ளதாகவும், இதில் மிக அதிக அளவாக தமிழகத்தில் 144 பேர் பலியாகியுள்ளனர் என பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மனித கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளின் கமிஷனர்கள் தங்கள் எல்லைக்குள் மனிதர்களைக் கொண்டு சாக்கடை, மனிதகழிவுகளை துப்புரவு செய்ய அனுமதிக்க மாட்டோம், மனிதர்களைக் கொண்டு கையால் மலம் அள்ளும் தொழில் செய்ய அனுமதிக்க மாட்டோம் என எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் அறியுறுத்தியுள்ளது.

கைமுறையாக துப்புரவு செய்யும் பணியின்போது விபத்து ஏற்பட்டால் அதற்கு, தனிப்பட்ட முறையில், மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே பொறுப்பேற்க வேண்டும்.

சாக்கடைகளை சுத்தம் செய்ய இயந்திரங்கள் வாங்கப்பட வேண்டும் மற்றும் கைமுறையான குப்பைகளைத் தடுப்பதற்கான முக்கியமான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

 

SOURCE: Patrikai.com