குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரவையில் தீர்மானம்

தமிழக சட்டப்பேரவையில், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை கொண்டு வந்து பேசிய தமிழக முதல்வர், “சட்டப்படியான சமத்துவம் மற்றும் சட்டப்படியான பாதுகாப்பை எந்த அரசும் மறுக்க முடியாது. 1956 குடியுரிமை சட்டத்தின் அடிப்படையில், ஒரு நபர் குடியுரிமை பெற மதம் என்பது அடிப்படையாக இல்லை.

ஆனால் தற்போது மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் என்பது, மதத்தை அடிப்படையாக வைத்து குடியுரிமை வழங்க வேண்டும் என்ற வகையில் அமைந்துள்ளது. எனவே இதனை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தனி தீர்மானமாக கொண்டு வரப்பட்டுள்ளது.

மத்திய அரசு கடந்த 2019-ல் இயற்றிய குடியுரிமை திருத்தச் சட்டம் மதசார்பின்மை கோட்பாடு, மத நல்லிணக்கத்திற்கும் உகந்ததாக இல்லை. அகதிகளாக வருவோரை மத ரீதியாக பாகுபடுத்தி பார்க்கும் வகையில் சி.ஏ.ஏ சட்டம் உள்ளது. இந்த குடியுரிமை திருத்த சட்டம் இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு செய்யும் துரோகம். இலங்கை தமிழர்கள் குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.