கைத்தறி நெசவாளர்களுக்கு 10% ஊதிய உயர்வு!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் திங்கட்கிழமை நடைபெற்றது. அதில் கைத்தறி நெசவாளர்களுக்கான அடிப்படை ஊதியம் 10% உயர்த்தப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த கொள்கை விளக்கக் குறிப்பை வெளியிட்ட அமைச்சர் காந்தி, கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படை கூலியில் 10 % மற்றும் அகவிலைப்படி 10% உயர்த்தி வழங்கப்படும். கதர், பாலிவஸ்திர ரகங்களை மக்கள் அறிந்துகொள்ள ரூபாய் 20 லட்சம் செலவில் விளம்பரப்படுத்தப்படும். சமூக ஊடகங்கள், தொலைகாட்சிகள் மூலமாக விளம்பரப்படுத்தப்படும். கைத்தறி வேட்டி, சேலை ரகங்களுக்கு நெசவுக்கு முந்தைய பணிக்கான கூலி உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.

மேலும், திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் ரூ. 6 கோடியில் சாயக் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் மற்றும் ரூ. 5 கோடி மதிப்பில் கைத்தறி ரகங்களின் பாரம்பரியம் குறித்த கைத்தறி அருங்காட்சியம் அமைக்கப்படும்.

கைத்தறி நெசவாளர்களின் நல்வாழ்விற்காக ஆரோக்கிய நெசவாளர் நல்வாழ்வு காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். 6 கூட்டுறவு நூற்பாலைகளில் பணிபுரியும் 75 நிரந்தர பணியாளர்களுக்கு ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்படும்.