மீண்டும் உதகைக்கு மலை ரயில் இயக்கம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரை மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற இம்மலை ரயிலில் பயணிப்பது இனிமையானது. மலை முகடுகளிடையே பல குகைகளை தாண்டி செல்லும் இம்மலை ரயிலில் பயணம் செய்ய உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வருகை தருவர்.

இம்மலை ரயிலானது மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வரை பல்சக்கரங்களில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக உதகை மலை ரயில் பயணத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்து தென்னக ரயில்வே அறிவித்தது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்னக ரயில்வே முக்கிய அறிவிப்பு வெளியிட்டது. திங்கட்கிழமை முதல் மேட்டுப்பாளையத்திலிருந்து செல்லும் உதகை மலை ரயில் இயக்கப்படும் எனவும், சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தப்பட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்தது.

மேலும், முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே மலை ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரை செல்லும் மலை ரயிலானது இன்று காலை 7.10 மணியளவில் மேட்டுப்பாளையத்திலிருந்து 150 பயணிகளுடன் உதகை நோக்கி சென்றது.

சுற்றுலாப்பயணிகள் உற்சாக மிகுதியில் ஆரவாரமிட்டும், கூச்சலிட்டும் மகிழ்ந்தனர். பல மாதங்களுக்கு பின்னர் இம்மலை ரயிலில் செல்ல இடம் கிடைத்ததன் காரணமாக சுற்றுலாப்பயணிகள் ஆர்வமிகுதியில் தங்களது செல்போன்களில் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

இதுகுறித்து அரியலூரை சேர்ந்த சுற்றுலாப்பயணி யோகேஸ்வரி கூறுகையில்: இம்மலை ரயிலில் பயணிப்பது தனது நீண்ட நாள் ஆசை. கொரோனா பரவல் காரணமாக எங்குமே செல்ல முடியவில்லை. திருமணமாகி ஒரு வருடம் கழித்தே இம்மலை ரயிலில் பயணிக்க இடம் கிடைத்துள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும், தனது கணவரின் பிறந்த நாளன்று மலை ரயலில் பயணிக்க இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.