வாளையாறு சோதனை சாவடியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு

கேரளாவில் நிபா வைரஸ் பரவலை தொடர்ந்து தமிழக – கேரளா எல்லைகளில் கண்காணிப்பை தீவிரபடுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்க்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து கோவை – கேரள எல்லையில் உள்ள வாளையாறு, வேலந்தாவலம், மீனாட்சிபுரம், உள்ளிட்ட 13 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு கூடுதல் பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கண்காணிப்பு பணிகளை கேரளா எல்லையான வாளையாறு சோதனை சாவடியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் திங்கட்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்: நிபா வைரஸ், ஜிகா வைரஸ் மற்றும் கொரோனா பாதிப்பு கேரளாவில் கண்டறியப்படுவதால் மாவட்ட எல்லையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து கோவை வருவோரிடம் கொரோனா நெகடீவ் சான்றிதழ் மற்றும் இரண்டு முறை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுவதோடு மாவட்டத்திற்கு வருவோரின் வாகன எண்கள் பதிவு செய்யப்படுகிறது.

மேலும் வாகன சோதனைகளை கடுமையாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சுல்தான்பேட்டையில் 3 மாணவர்கள் நோய்த்தொற்று பரவிய சம்பவம் குறித்த கேள்விக்கு பள்ளிக்கூடங்கள் அனைத்தும் கிருமிநாசினி அடிக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் நடைபெற்று வருவதாகவும், நோய் தொற்று கண்டறியப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் 83 கிலோ லிட்டர் திரவ ஆக்சிஜன் தயார் நிலையில் உள்ளது. பரவலை தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகளும் போடப்பட்டுள்ளது. மூன்றாவது அலைக்கு செல்லாமல் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கப்படுகிறது.

அரசு மருத்துவமனைகளில் அனைத்து காய்ச்சலுக்கும் தீவிரமாக கண்காணித்து வருவதாக கூறிய அவர்
ஜூலை மாதம் மேற்கொள்ளபட்ட ஜீரோ பிரிவிலென்ஸ் ஸ்டடி (zero prevalence study) கோவை மாவட்டத்தில் உள்ள பொதுமக்களில் 43% மக்களுக்கு மட்டுமே எதிர்ப்பு சக்தி உள்ளதாக கண்டறியபட்டது. அதிகப்படியான தடுப்பூசி செலுத்தபட்டதின் காரணமாக எதிர்ப்பு சக்தி 55 சதவீதமாக அதிகரித்து உள்ளது. 45% மக்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள காரணத்தால் அவர்கள் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தபட்டுள்ளது என்றார்.