உலகெங்கும் பேசப்படும் “நவரசா” ஆந்தாலஜி தொடர்..!

சமீபத்தில் நெட்ஃப்லிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள “நவரசா” ஆந்தாலஜி தொடரை, ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க இந்த தொடர் பெரும் வரவேற்பை குவித்து வருகிறது.

திரைத் தொழிலாளர்களின் நலனுக்காக, தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் ஒன்றிணைந்த தருணமான இந்த தொடர் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட 10 நாடுகளில் நெட்ஃப்லிக்ஸ் தளத்தில் முதல் 10 இடத்தில் உள்ளது.

இந்திய திரைத்துறையின் பெருமை மிகு படைப்பாளியாக கொண்டாடப்படும் இயக்குநர் மணிரத்னம் பற்றும் முக்கிய படைப்பாளி ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர்.

மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளை கூறும் ஆந்தாலஜி தொடராக, இந்த தொடர் உருவாகியுள்ளது.

தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், ஆளுமைமிக்க இயக்குநர்கள் பங்களிப்பில், இந்தியாவின் மிக முக்கிய பொன் தருணமாக இப்படைப்பு அரங்கேறியுள்ளது.

இத்தொடரின் உலகளாவிய வெற்றி மற்றும் பெரும் வரவேற்பு குறித்து இயக்குநர் மணிரத்னம் பற்றும் படைப்பாளி ஜெயேந்திரா பஞ்சாபகேசன் கூறியதாவது:

“நவரசா” தொடருக்கு கிடைத்து வரும் பெரும் வரவேற்பு, எங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாமல், எல்லைகளை கடந்து பல நாடுகளிலும் இத்தொடர் கொண்டாடப்படுகிறது. இந்த நவரசத்தின் சங்கமம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததுள்ளது என்பதற்கு இது ஒரு சான்று. இந்த தொடருக்கான பார்வையாளர்களில் 40% பேர் இந்தியாவிற்கு வெளியிலிருந்து பார்த்தவர்களே.

இத்தொடரின் உட்கருத்து தமிழில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை கவர்ந்ததில், நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்.

முன்னனி நட்சத்திரங்கள் மற்றும் படப்பாளிகளுடன் இணைந்து உருவாக்கிய இப்படைப்பு அற்புதமான பயணமாக இருந்தது. நெட்ஃப்லிக்ஸ் தளத்தின் ஒத்துழைப்பு மூலம், பல உயிர்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திய அற்புதமான முயற்சி சாத்தியமாகியது மிகப்பெரும் மகிழ்ச்சி. என்றனர்.