3 -வது அலை : கோவையில் 12,355 படுக்கைகள் தயார் – மாவட்ட ஆட்சியர் தகவல்

மூன்றாவது அலை கோவை மாவட்டத்தை தாக்கினால் அதை தடுப்பதற்காக 12,355 படுக்கைகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில், கொரோனா 3 -ம் அலையை சமாளிக்கும் வகையில், அரசு, தனியார் மருத்துவமனைகளில், 12,355 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்த, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சாதாரண படுக்கைகள் 7183, ஆக்சிஜன் படுக்கை 4526, தீவிர சிகிச்சை படுக்கைகள் 646 என மொத்தம், 12,355 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

குழந்தைகளுக்கு பிரத்யேகமாக அரசு, தனியார் மருத்துவமனைகளில், 573 சாதாரண படுக்கை, 959 ஆக்சிஜன் படுக்கை, 167 தீவிர சிகிச்சை படுக்கைகள் என, 1699 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

அரசு சார்பில், 14 சிறப்பு கொரோனா தனிமைப்படுத்தும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 2 மையங்களில் சித்தா சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில், 14 தற்காலிக சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் கர்ப்பிணிகளுக்கு, 3 சிறப்பு மையங்களும் உள்ளன.

அரசு மருத்துவமனைகளில், திரவ ஆக்சிஜன் கொள்ளளவு அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில், 2233 ஆக்சிஜன் செறிவூட்டிகள் நிறுவப்பட்டுள்ளன. அரசு, தனியார் மருத்துவமனைகளில் அவசர காலங்களில் பயன்படுத்த, 2488 ஆக்சிஜன் சிலிண்டர்கள், தயார் நிலையில் உள்ளன.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் உளவியல் ஆலோசனைகளுக்கு, 0422 – 2200029, 220 1824, 220 1825 ஆகிய எண்களை, தொடர்பு கொள்ளலாம். வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களை கண்காணிக்க, மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு குழுவினர் பணியில் உள்ளனர்.

இத்தகவலை, கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.