“உள்ளாட்சித் தேர்தலில் கவர்ச்சிகர திட்டங்கள்” – அமைச்சர் பேட்டி

கோவையில் இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறையின் அமைச்சர் சக்கரபாணி பி.எஸ்.ஜி மருத்துவமனையில் (31.07.2021) துவக்கி வைத்தார்.

கோவையில் தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு திட்டத்தின் மூலம் ரூ.1 கோடியே 98 லட்சம் நிதி திரட்டப்பட்டு முதற்கட்டமாக 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட தடுப்பூசிகள் கோவை வந்துள்ளன. இத்தடுப்பூசிகள் இன்று மக்களுக்கு போடப்பட்டன.

இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தடுப்பூசிகளை அனைவருக்கும் செலுத்த முயற்சி செய்து வருகிறோம். மத்திய அரசு எவ்வளவு தடுப்பூசி கொடுத்தாலும் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

சி.எஸ்.ஆர் நிதி மூலம் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் கோவை மாவட்டத்தில் அதிக நிதி மூலம் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும். இது வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும்.

கோவையில் 11 லட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கோவையில் கடந்த சில நாட்களை விட 20 என்ற எண்ணிக்கையில் தான் தொற்று அதிகரித்துள்ளது. தொற்றை குறைக்க தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கோவை- கேரள எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் முககவசம் அணியாமல் வெளியே சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

கோவை மாவட்டம் புறக்கணிக்கப்படவில்லை. தொடர்ந்து ஆய்வு பணிகளுக்காக அமைச்சர்கள் வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலினும் கோவை வந்து ஆய்வு செய்துள்ளார் என்றார்.

வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் வெற்றி பெறுவோம். இதற்காக கவர்ச்சிகர திட்டங்களை முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என அமைச்சர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், பி.எஸ்.ஜி மருத்துவமனை இயக்குனர், முன்னாள் எம்.எல்.ஏ நா.கார்த்திக் ஆகியோர் பங்கேற்றனர்.