“இளைஞர்களுக்கு வெளிப்படை தன்மையுடன் வேலை வாய்ப்பு” – அமைச்சர் பெரியசாமி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவல கூட்டரங்கில் கூட்டுறவு துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் கூட்டுறவு துறையினருடன் ஆலோசனை கூட்டம் புதன்கிழமை (28.07.2021) நடைபெற்றது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கொரோனா நிதி ஒரு சிலருக்கு மட்டும் கொடுக்கப்படாமல் இருப்பதாகவும் இந்த மாத இறுதிக்குள் வழங்கிட அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். விவசாயிகளுக்கு பயிர் கடன் கடந்த ஆண்டு 9500 கோடி மட்டுமே வழங்கிய நிலையில் இந்த ஆண்டு 11500 கோடி பயிர் கடனை வழங்க முதல்வர் அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

சிந்தாமணி கூட்டுறவு பண்டக சாலையினை பார்வையிட்டதாகவும், நியாய விலை கடைகளில்
தமிழகம் முழுவதும் சேல்ஸ் மேன், பேக்கர்ஸ் பணியிடங்கள் காலியாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது எனவும், நியாயவிலை கடைகளில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பபடும் எனவும் தெரிவித்தார்.

கூட்டுறவு துறையின் மூலமாக செயல்படும் சுய உதவிகுழுக்களின் எண்ணிக்கையினை 55 ஆயிரத்தில் இருத்து ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

படித்த இளைஞர்களுக்கு வெளிப்படை தன்மையுடன் எந்த தவறுக்கும் இடமளிக்காமல் வேலை வாய்ப்பும் வழங்கப்படும் என தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள 4451 விவசாய கடன் சங்கங்களில் நடைபெற்றுள்ள விதி மீறல்கள் குறித்து
ஆய்வுகள் நடைபெற்று வருகின்றது எனவும் வரும் 31 ம் தேதி அந்த ஆய்வு முடிவுகள் வந்த பின்னர் அதில் உள்ளவை குறித்து தெரிவிக்கப்படும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார். வேப்பபுண்ணாக்கு தயாரிப்பை அதிகரிக்க உத்திரவிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்த அவர், தரமான விதைகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

நீண்டகாலமாக ஒரே கூட்டுறவு சங்கத்தில் உள்ள பணியாளர்களை மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், திமுக ஆட்சியில் கூட்டுறவு தேர்தல் முறைப்படி நடக்கும் என தெரிவித்தார். இதில் வனத்துறை அமைச்சர் உட்பட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.