விபத்தில் இறந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாய் நிதி உதவி

 

உக்கடம் பகுதியை சேர்ந்த விபத்தில் இறந்த ஒப்பந்த தூய்மைப் பணியாளர் பிரகாஷ்(32)குடும்பத்திற்கு தேசிய தூய்மைப் பணியாளர் நல ஆணைய தலைவர் வெங்கடேசன் 1 லட்சம் ரூபாய் நிதி உதவியும், அங்கிருந்த தூய்மைப் பணியாளர்களுக்கு கிருமிநாசினி, முகக்கவசம் அடங்கிய பைகளும் வழங்கினார்.

இது குறித்து வெங்கடேசன் பேசுகையில், தூய்மைப் பணியாளர் இறந்த செய்தி தேசிய துப்புரவு ஆணையத்திற்கு வந்தவுடன் மாவட்ட ஆட்சியரை அணுகி உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்து அவரது குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் மத்திய அரசின் இலவசமான ஆயுஸ்மான்  இன்சூரன்ஸ்  திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் செய்து தரவும் பேசியுள்ளோம் என்று கூறினார்.

இது அனைத்து ஊழியர்களும் போட்டுகொள்ளலாம் என்று தெரிவித்த அவர் பிரதமரின் 12 ரூபாய் விபத்து காப்பீடு, 330 ரூபாய் ஆயுள் காப்பீடு போன்றவையும் உள்ளது. இது தனிபட்ட நபர் செலுத்த வேண்டியது அதை அரசாங்கமே கட்டுவதற்கு  பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்.

கர்நாடகா மாநிலத்தில் ஒப்பந்த ஊழியர்கள் முறையே இல்லை என்று கூறிய அவர் மாநகராட்சி நிர்வாகமே பணியாளர்களுக்கு சம்பளம் அளித்து வருவதாகவும் அது போலவே அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்க கோரி அனைத்து மாநில முதலமைச்சர்களிடமும் கூறி வருகிறோம் என்று கூறினார்.

இது போன்ற நல வாரியம் இருப்பதே அதிக மக்களுக்கு தெரியவில்லை. இது போன்ற ஒரு வாரியம் இருப்பது மக்களுக்கு தெரிய வர வேண்டும் என்றும் அப்போது பல்வேறு பிரச்சனைகளை குறைக்க முடியும் என்று தெரிவித்தார். மல குழியில் இறங்க கூடாது என்ற சட்டம் இருப்பினும் பலரும் அதில் இறங்கி உயிரிழக்கின்றனர். இந்த தொழிலில் ஈடுபடுபவர்களை மீட்டு  அவர்களுக்கு லோன் ஏற்பாடு செய்து வேறு வேலைக்கு செல்ல பரிந்துரை செய்து வருகிறோம் என்று கூறினார். ஒப்பந்த ஊழியர்கள் அவர்களது குறைகளை புகார்கள் மூலம் தெரிவித்தால் அவர்களுக்கு உடனடியாக குறைகளை களைய நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.