ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு

கோவை, வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ் அகில இந்திய அளவில் நடத்திய “புதுமை படைப்புகளின் துவக்கம் – டெக்ஜியம்” என்ற போட்டியில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்தனர்.

“புதுமை படைப்புகளின் துவக்கம்“ என்ற தலைப்பில் பல்வேறு சுற்றுகளை கொண்ட இப்போட்டியில் அகில இந்திய அளவில் இருந்து என்.ஐ.டி, ஐ.ஐ.டி ,வி.ஐ.டி சென்னையில் உள்ள நாஸ்காம் மற்றும் பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் போன்ற நிறுவனங்களில் இருந்து குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், கம்ப்யூட் விஷன், 5ஜி, பணிச்சூழலியல், நிலைத்தன்மை என பல்வேறு தலைப்புகளில் இருந்து திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் தரணி, மாரி கிருஷ்ணன், நிஷாந்த், விக்னேஸ்வரன் ஆகியோர் குளிர் சாதன பெட்டிகளில் ஆற்றல் திறன் மிக்க பனிக்கட்டியை உறையவைக்கும் முறை என்ற தலைப்பில் சமர்ப்பித்த திட்டத்திற்கு இரண்டாம் இடத்தையும் பரிசுத்தொகையாக ரூபாய் 5 லட்சத்தையும் பெற்றனர். இத்திட்டம் துணைப்பேராசிரியர்கள் பாலமுருகன் மற்றும் வேல்முருகன் மேல்பார்வையில் நடைபெற்றது.

2017 முதல் 4 முறை நடைபெற்ற இப்போட்டிகளில், இக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் மூன்றாவது முறையாக பரிசுகளை வென்றுள்ளனர். பரிசு பெற்றவர்களை எஸ்.என் ஆர் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி, முதல்வர் என்.ஆர்.அலமேலு, துணை முதல்வர் பி.கருப்புசாமி, ஆராய்ச்சிக்கூட பொறுப்பாளர்கள் கணேஷ் மற்றும் ராம்குமார் ஆகியோர் பாராட்டினார்கள்.