பையா ஆர்.கிருஷ்ணனை ஆதரித்து திருச்சி சிவா கோவையில் பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் கோவை மாநகர் மேற்கு மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளராக போட்டியிடுகின்ற பையா ஆர். கிருஷ்ணனை ஆதரித்து தி.மு.க வின் கொள்கை பரப்புச் செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா, கவுண்டம்பாளையம் பகுதியில் பிரச்சாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், தற்போதைய நிலையில் மத்தியி அரசும் – மாநில அரசும் நம்மை வஞ்சித்துக் கொண்டு இருக்கின்றன உதாரணமாக பெட்ரோல் – டீசல் விலை உயர்வு, பஸ் கட்டணம் மற்றும் பால்விலை உயர்வு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் போன்ற செயல்களால் மக்களை வஞ்சித்துக் கொண்டு இருக்கிறார்கள். மேலும் உங்களுக்கு கிடைத்திருக்கும் வேட்பாளர் பையா ஆர்.கிருஷ்ணன், என்றும் மக்களோடு மக்களாக – உங்களில் ஒருவராக இருப்பவர் எந்நாளும் உங்களுக்காக உழைத்து சிறப்பாக பணியாற்றக் கூடியவர். கொரோனா காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை தொகுதி முழுவதும் வழங்கியவர். இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரை ஆதரிப்பதோடு, மக்களுக்கு ஒரு விடிவுகாலத்தை ஏற்படுத்த நமது உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து இவரை மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அதனை தொடர்ந்து வேட்பாளர் பையா ஆர்.கிருஷ்ணன் கவுண்டம்பாளையம் பகுதியின் 9 வது மற்றும் 5 வது வார்டுகளுக்கு உட்பட்ட பிரபு நகர், அண்ணா நகர், பியூன்ஸ் காலனி, சேரன் நகர், பாலன் நகர், எஸ்.பி.நகர் ஆகிய பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது பல இடங்களில் பட்டா பிரச்சனை, குடிநீர் பிரச்சனை, சாலை மற்றும் சாக்கடை வசதிகள் வேண்டுமென அப்பகுதி பெண்கள் கோரிக்கை வைத்தனர். இவைகள் அனைத்தையும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உடனே செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார்.