பொது நிகழ்ச்சிகளில் யாரும் முககவசம் அணிவது இல்லை – கோவை மாவட்ட ஆட்சியர்

கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (17.3.2021) நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு வைரஸ் தடுப்பு தொடர்பான துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு   விநியோகம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவையில் கொரோனா தொற்று அதிக அளவில் செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில்   இருந்தது. அரசுத்துறையின் தொடர் நடவடிக்கைகள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் வழங்கிய ஒத்துழைப்பினால் தொற்றின் தாக்கம் குறைந்தது. தற்போது தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 40 பேராக குறைந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 15 நாளாக கோவையில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து 80க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு நேற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் நாளொன்றுக்கு 40 பேருக்கு கூடுதலால பாதிப்பு  ஏற்பட்டுள்ளது.

அரசியல் நிகழ்ச்சிகள், திருமண நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் யாரும் முககவசம் அணிவது இல்லை. கொரோனா இல்லை என்ற மன நிலையோடு பொதுமக்கள் வெளியே வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால், கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் சூழல் உள்ளது.

வணிக நிறுவனங்கள், பல்வேறு கடைகள் அரசு விதித்த கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றி கொரோனா தொற்று 80 க்கும் அதிகரிக்காமல் குறைக்க ஒத்துழைக்க வேண்டும். மக்கள் முககவசம் அணியவில்லை என்றால் ரூ. 100 முதல் ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு  விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் தடுப்பூசி செலுத்த சில தனியார் மருத்துவமனைகளுக்கும் அரசு அனுமதி கொடுத்துள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கூறினார்.