5 சதவீத தனி இடஒதுக்கீடு: தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 கோவை: அரசு வேலைவாய்ப்பில் 5 சதவீத தனி இட ஒதுக்கீடு மற்றும் சட்டப் பாதுகாப்பு கோரி தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடி திருத்துவோர் நலச்சங்கம் சார்பில் கோவையில் இன்று (26.2.2021) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மருத்துவ சமூக நலச் சங்கம் மற்றும் முடிதிருத்துவோர் நல சங்கம் சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு வேலைவாய்ப்பில் 5 சதவீத தனி இட ஒதுக்கீடு மற்றும் முடி திருத்தும் தொழில் செய்பவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் கூறுகையில், ” மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சில ஆதிக்க சாதியினர் உள்ளனர். அவர்கள் எங்களுக்கான உரிமைகளை தட்டிப் பறிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே 5 சதவீத இட ஒதுக்கீடும், சட்ட பாதுகாப்பும் மிகவும் இன்றியமையாத தேவையாக உள்ளது. எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுபவர்களுக்கு வரும் தேர்தலில் ஆதரவு அளிப்போம்.” என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்ட பொறுப்பாளர் மகேஷ் குமார் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.