வேளாண் பல்கலை துணை வேந்தருக்கு சிறந்த துணை வேந்தருக்கான விருது

6வது தேசிய இளைஞர் மாநாட்டில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் நீ.குமார் அவர்களுக்கு 2020ம் ஆண்டிற்கான சிறந்த துணை வேந்தர் விருது அண்மையில் வழங்கபட்டது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 13வது துணை வேந்தராக பொறுப்பேற்ற நீ.குமார் அவர்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதில் முழு ஆர்வம் காட்டி, சர்வதேச பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நிறைவேற்றி  வேளாண் கல்வியைச் சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தியுள்ளார்.

இளம் விஞ்ஞானிகளுக்கு ஒன்பது தனிப் பட்டறைகள் நடத்தி, புதிய திட்டங்கள் தயாரித்தல் மற்றும் நிதி பெறுதல் போன்றவற்றை ஊக்குவித்துள்ளார். வெளி நிதி நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட நிதியானது 2018ல் சுமார் ரூ. 19 கோடியாக இருந்தது. ஆனால் 2020ல் ரூ. 57 கோடியை எட்டியுள்ளது. தாய்நாடு சார்ந்த மரம் நடவு, விதைப் பந்துகள் விதைத்தல், வேளாண்மையில் ட்ரோன்கள, சென்சார்கள், தொலையுணர் சாதனங்கள் உதவியுடன் பயிர் இழப்பு மதிப்பீடு, போர்க்கால அடிப்படையிலான பூச்சி மற்றும் நோய் பிரச்சனைகளைக் களைதல், விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மேம்பட்ட விதை மற்றும் நாற்று உற்பத்தி போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

பல முயற்சிகளின் காரணமாகவும், பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் படைப்புகளாலும், இப்பல்கலைக்கழகம் இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழக தர வரிசைப்பட்டியலில் 33ம் இடத்திலிருந்து 8வது இடத்துக்கு முன்னேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.