அதிமுக அரசுக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை

கோவையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் முதலமைச்சர் பேச்சு

கோவை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பிரச்சார பயணமாக கோவை வந்துள்ளார். இன்றும் நாளையும் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றதொகுதிகளிலும் முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதன்படி, இன்று சனிக்கிழமை காலை கோனியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து ராஜவீதியில் பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

அப்போது முதலமைச்சர் பேசியதாவது: கோவை வளர்ந்து வரும் மாநகரம். இந்த 10 ஆண்டுகளில் கோவை எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை எண்ணிப்பாருங்கள். திமுக.,வினர் குறைகளைச் சொல்லி வாக்கு கேட்கிறார்கள். ஆனால் நாங்கள் என்னென்ன செய்துள்ளோம் இன்னும் என்னென்ன செய்ய இருக்கிறோம் என்று கூறி வாக்கு கேட்கிறோம். கோவையில் மேம்பாலங்கள், ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள், தாலிக்கு தங்கம், முதியோர் உதவித்திட்டம், புதிய மகளிர் கல்லூரி, ஆட்சியர் அலுவலகம்,  மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை மேம்படுத்துதல் என பல திட்டங்களை செய்துள்ளோம். தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளோம். சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் மாநிலமாக உள்ளது.

கொரோனா காலத்தில் எட்டு மாதங்கள் விலை இல்லாமல் அரிசி பருப்பு எண்ணெய் சர்க்கரை ஆகிய பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் வழங்கினோம். ஆனால் திமுக ஒரு மாதமாவது விலையில்லா பொருட்களை வழங்கி உள்ளதா. பொங்கள் கொண்டாட மக்களுக்கு 2500 ரூபாய் பணம் வழங்கினோம். அதை பொறுக்க முடியாத திமுக தலைவர் ஸ்டாலின் வழக்கறிஞர்கள் துணையுடன் நீதிமன்றத்தை நாடி தடையானை வாங்கச் சென்றார். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக சார்பில் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டது. ஆனால் அந்த வாக்குறுதிகள் என்ன ஆனது? ஒரு நன்மை கூட திமுக செய்யவில்லை. இன்று காலையிலேயே கோவை குலுங்கும் அளவிற்கு கூட்டத்தை நாங்கள் பார்க்கிறோம். அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்று மக்களின் எண்ணி உள்ளனர் என்று நன்றாக புரிகிறது.

மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் பெண்களை அமரவைத்து குறைகளை கேட்பது போல திமுக தலைவர் ஸ்டாலின் நாடகமாடி வருகிறார். அதன்படியே கோவையிலும் ஒரு கிராம சபை கூட்டம் நடந்தது. அங்கு பெண் ஒருவர் குறைகளை சுட்டிக்காட்டி பேசினார். அதனை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அந்த பெண் திமுக. வினரால் தாக்கப்பட்டார் இந்த செய்தி அனைத்து தொலைக்காட்சிகளிலும் வெளியானது. இதுதான் திமுக நடத்தும் கிராம சபை கூட்டம். அதிமுக தலைவர்களை விமர்சிப்பதும், கவர்ச்சி வார்த்தைகளைப் பேசி மக்களை குழப்பவும் தான் திமுக மக்கள் கிராமசபை கூட்டம் நடத்துவதற்கான காரணம். மக்கள் கேட்கும் கேள்விகளை ஏற்று அதற்கு பதில் கூறுவது தான் ஒரு தலைவனுக்கு அழகு. ஆனால் அந்த நாகரீகத்தை கூட ஸ்டாலினால் கடைபிடிக்க முடியவில்லை.

திமுக ஆட்சியில் இருப்பது போல கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்புகள் இல்லாமல் வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் நிம்மதியாக தொழில் செய்கின்றனர். இங்கு மதம் மற்றும் ஜாதி சண்டைகள் வர விடமாட்டோம். இதனால் பல தொழில் அதிபர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க வருகிறார்கள்.

அதிமுக அரசுக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. யாரோ எழுதிக்கொடுப்பதை வைத்து பேசிவருகிறார் ஸ்டாலின். துண்டு சீட்டு இல்லாமல் நாங்கள் பேசத் தயார். குறை இருந்தால் எங்களிடம் சொல்லுங்கள். இந்த நல்லாட்சி தொடர மீண்டும் மக்கள் அதிமுக விற்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.