கோவை அரசு மருத்துவமனையை பாராட்டிய நீதிபதி ரவி !

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வந்த நிலையில், தற்போது தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்த இக்கட்டான காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் பணிகள் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது. இதில் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை தேசிய அளவிலான பாராட்டுகளைப் பெற்றது. இந்த சூழலில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்டம்- 1997 சிறப்பு மாவட்ட  நீதிமன்ற (கோவை) நீதிபதி ரவி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பிய நீதிபதி, கோவை அரசு மருத்துவமனையை வெகுவாக பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: கோவை அரசு மருத்துவமனைக்கு எனது நன்றியை முறையாகவும், நேர்மையாகவும் தெரிவிக்க விரும்புகிறேன். மருத்துவர்கள் குணாளன் சுரேஷ், கீர்த்திவாசன், முதுகலை பயிலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணி ஒழுக்கமாகவும், போற்றத்தக்க வகையிலும் இருந்தது. சிகிச்சை மட்டுமல்லாது நேர்மறையான ஆலோசனைகள் எனக்கு மட்டுமன்றி மற்ற நோயாளிகளுக்கும் கிடைத்தது. சரியான திட்டமிடல், முறையான மருத்துவம் நோயாளிகளுக்கு பயன் கொடுத்தது. செவிலியர்கள் ஜூடி மற்றும் ஷாந்தி சகோதரத்துவத்துடன் எனக்கு உதவினர். கவலைப்பட வேண்டாம் என்று பாசத்துடன் கூறினார்கள். வீடு திரும்பிய பிறகு என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். பெருந்தொற்றை முறியடித்து இந்த பணியாளர்களின் எதிர்கால சாதனைகள் மற்றும் வெற்றிகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். இவ்வாறு நீதிபதி ரவி தெரிவித்துள்ளார்.