தைப்பூசத்தை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்

கோவையில் வேல் யாத்திரை பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் முருகன் கோரிக்கை

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதற்காக கருப்பர் கூட்டத்தை கண்டிக்கும் வகையில் கடந்த 6ஆம் தேதி முதல் பாஜகவின் மாநில தலைவர் முருகன் வேல் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கோவை மருதமலை முருகன் கோவிலில் கர்நாடக துணை முதலமைச்சர் அஸ்வந்த் நாராயணன் மற்றும் பாஜகவின் மாநில தலைவர் முருகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் வேல் பூஜை செய்தனர். பாஜகவினர் ஏற்பாட்டில் பூர்ண கும்ப மரியாதையை துணை முதலமைச்சர் மற்றும் பாஜகவின் மாநில தலைவர் ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து சிவானந்தா காலனியில் அமைக்கப்பட்டிருந்த வேல் யாத்திரை பொதுக்கூட்ட மேடைக்கு வந்த பாஜகவின் மாநில தலைவர் முருகனுக்கு அங்கு திரண்டு இருந்த பாஜக தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 

அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் இடையே பாஜகவின் மாநில தலைவர் முருகன் பேசுகையில், தான் வேல் யாத்திரையை தொடங்கியதிலிருந்து திமுகவுக்கும் திமுகவின் தலைவர் ஸ்டாலினுக்கும் தூக்கம் போய் விட்டது எனவும் வேல் யாத்திரை யாருக்கும் தொந்தரவு இன்றி அமைதியாக நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்தார். கொரோனா தாக்கும் என பயந்து ஸ்டாலின் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்தார். ஆனால் பாஜகவினர் ஊரடங்கு நேரத்திலும் வெளியே வந்து ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்கினர் எனவும் தெரிவித்த அவர் கந்த சஷ்டி கவசத்தையும் தமிழ் கடவுள் முருகனையும் இழிவுபடுத்தி அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். ஊழல் என்பது திமுகவுடன் பிறந்தது எனவும் ஊழலையும் திமுகவையும் பிரிக்க முடியாது எனவும் கூறிய அவர் திமுகவில் ஆட்சியைப் பிடிக்கும் கனவு கனவாகவே இருக்கப் போகிறது என தெரிவித்தார். மேலும் மற்ற மத பண்டிகைகளுக்கு அரசு விடுமுறை விடப்படுவது போலவே தைப்பூசத்துக்கும் தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

பின்னர் பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் பேசுகையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக உறுப்பினர்கள் கட்டாயம் வெற்றி பெற்று கோட்டைக்கு செல்வார்கள் எனவும் குறிப்பாக கோவையிலிருந்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். கிராமத்தில் பிறந்த தன்னை பாஜக தேசிய மகளிர் அணி தலைவராக பொறுப்பு வழங்கி அழகு பார்த்து இருக்கிறது எனவும் நம்முடன் பணியாற்றிய தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாஜக தெலுங்கானா மாநிலத்தில் கவர்னர் பதவி வழங்கி உள்ளது எனவும் தெரிவித்தார். ஹிந்து மக்களையும் இந்து தெய்வங்களையும் இழிவுபடுத்துவதை எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, பாஜகவின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை பேசுகையில்,  2021 சட்டமன்ற தேர்தலில் கோவை பாஜகவின் கோட்டை என்பதை நிரூபிக்கும் எனவும் கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயணன் மிஸ்டர் கிளீன் என்று பெயரெடுத்தவர் எனவும் அதேபோல பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்களும் மிஸ்டர் கிளீன் ஆக இருப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார். கர்நாடக துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயணன் பேசுகையில், தமிழக மக்கள் பாஜகவுக்கு வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக எடுத்துச் செல்வோம் எனவும் தமிழகத்தை தாண்டியும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் வேல் யாத்திரை குறித்து ஒவ்வொருவரும் பேசி வருகின்றனர் எனவும் தெரிவித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர். சுமார் 900 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.