பெண்களின் கதாநாயாகராக பிரதமர் மோடி இருக்கின்றார் – வானதி சீனிவாசன்

பாஜக அகில இந்திய மகளீர் அணி தலைவராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட வானதி சீனிவாசன், டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அவர், பா.ஜ.க மகளிரணி தலைவர் பதவி என்ற மிக முக்கியமான கௌரவத்தை தமிழகத்திற்கு வழங்கியிருக்கின்றனர். தென்னிந்தியாவில் இருந்து முதல்முறையாக தமிழகத்திற்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கின்றது.

மத்திய அரசன் திட்டங்களை பெண்கள் வழியாக கொண்டு செல்வது எங்கள் பிரதான பணியாக இருக்கும். அனைத்து நிலையிலும் பெண்களுக்கு உதவும், முக்கியத்துவம் கொடுக்கும் அரசாக இந்த அரசு இருக்கின்றது. நாடு முழுவதும் பெண்களுக்கு பாதுகாவலராக பிரதமர் இருக்கின்றார் என்பதை மக்களிடம் கொண்டு செல்வோம்.

தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக வெற்றிவேல் யாத்திரையை மாநில தலைவர் முருகன் நடத்திக்கொண்டு இருக்கின்றார். கட்சியை பலப்படுத்த மட்டுமல்ல, தமிழகத்தின் சிறப்பையும் நாடு முழுவதும் எடுத்து செல்ல இதை பயன்படுத்துவேன். தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சியை ஏற்படுத்துவதையே மாற்றமாக பார்க்கின்றோம். தே.ஐ.கூட்டணியில் இருக்கின்றோம் .

கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை. கூட்டணியின் தலைமையாக அதிமுக இருக்கின்றது. ஓவ்வொரு கட்சியிக்கும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கும். பா.ஜ.க யாரை பார்த்தும் பயப்படவில்லை என தெரிவித்தார். மேலும் பெண்களின் கதாநாயாகராக பிரதமர் மோடி இருக்கின்றார். கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்து கட்சி தலைமை முறைப்படி அறிவிக்கும். வெற்றிவேல் யாத்திரை ஒரு அடையாள யாத்திரை.

இந்துகளை கொச்சைபடுத்துபவர்களை அம்பலப்படுத்தவே இந்த யாத்திரை. பா.ஜ.கவிற்கு இனி தமிழகத்தில் பின்னடைவு என்பதே கிடையாது. முன்னேற்றம் மட்டும் தான் என கூறினார்.

வேல் யாத்திரையை தடுத்தால் எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தெரிவித்த கருத்திற்கு அதிமுக நாளேடு வெளியிட்ட கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், சட்டப்படி நடைபெறும் வேல் யாத்திரையை தடுத்தால் மக்களிடையே எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் எனதான் சொன்னேன். அதிமுக அதை சரியாக புரிந்து கொள்ளவில்லை என தெரிவித்தார்.