பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாள்

சுதந்திரப் போராட்ட வீரர், தலைசிறந்த பேச்சாளர், ஆன்மிகவாதியான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1908 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் பிறந்தார். இவர் தனது சொந்த முயற்சியில் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார்.

முதுகுளத்தூர் அடுத்த சாயல்குடியில், விவேகானந்தர் பெயரில் தொடங்கப்பட்ட நூலகத் திறப்பு விழா 1933 ஆம் ஆண்டு நடந்தது. தலைமைப் பேச்சாளர் வராததால், இவரைப் பேச அழைத்தனர். மேடையேற்றம் இவருக்கு முதல்முறை. ஆனால், விவேகானந்தரின் தத்துவங்கள் பற்றி 3 மணி நேரம் மடைதிறந்த வெள்ளம்போலப் பேசி, பாராட்டு பெற்றார்.

காங்கிரஸில் இருந்து 1948 ஆம் ஆண்டு விலகிய இவர், பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்தார். நேதாஜி என்ற வாரப் பத்திரிக்கையைத் தொடங்கினார். இவர் தேர்தலில் வெற்றி பெற்று மதராஸ் மாகாண சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றினார்.

விடுதலைக்காகப் போராடிய முத்துராமலிங்கத் தேவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு 1963 ஆம் ஆண்டு தனது பிறந்தநாளன்றே மறைந்தார்.