கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல அறுவை சிகிச்சை பிரிவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 25 குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வர் காளிதாஸ் தெரிவித்தார்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் காளிதாஸ் மற்றும் குழந்தைகள் நல பிரிவு மருத்துவர்கள் வெங்கடேஷ், பூமா ஆகியோர் இன்று (24.10.2020) செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை தனியாக நடைபெற்று வந்தாலும் மற்ற சிகிச்சைகள் வழக்கம் போல நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
குறிப்பாக குழந்தைகள் நல அறுவை சிகிச்சை பிரிவில் கடத்த ஒரு மாத்தில் மட்டும் பல்வேறு உடல் பாதிப்புகளுடன் இருந்த 25 குழந்தைகள் காப்பாற்றப்பட்டு இருக்கின்றனர் எனவும் தெரிவித்தனர்.
பிறந்து 7 நாட்கள் ஆன குழந்தைகளும் காப்பாற்றபட்டு இருக்கின்றனர் எனவும் தெரிவித்த மருத்துவர்கள், கொரோனா தொற்று காலத்தில் அதிகளவு குழந்தைகள் அறுவை சிகிச்சை நடந்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், கொரோனா காரணமாக குழந்தைகள் வீடுகளில் இருப்பதால் கல் மற்றும் சிறிய பொருட்களை விழுங்கி விடுவது, சுடு தண்ணியை கை, கால்களில் ஊற்றிக்கொள்வது, கெரசினை குடித்து விடுவது, ஆணியை மிதித்து புண்களை ஏற்படுத்துவது போன்ற பிரச்சினைகள் அதிகம் வந்ததாகவும் குழந்தைகள் நல மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் கொரோனா தொற்று இருந்தாலும், தனியார் மருத்துவமனைகளைவிட அரசு மருத்துவமனைக்கு மக்கள் வந்து சென்றனர் எனவும் தெரிவித்தனர். குறிப்பாக கொரோனா தொற்று ஏற்பட்ட பின்னர் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்து இருப்பதாகவும், அதில் குழந்தைகளுக்கு பிரச்சினைகளும் அதிகமாக இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். கொரோனாவிற்கு முன்பு 600 பிரசவங்கள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது 950 பிரசவங்கள் வரை நடைபெற்று வருவதாகவும், இதனால் பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகமாகி இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பிறவியில் உறுப்பு ஊனம் ஏற்படுவது, உணவு குழாய் மற்றும் சுவாச குழாய் இணைந்து இருப்பது, மல துவாரம் இல்லாமல் இருப்பது, தொப்புள் மூலம் குடல் வெளியே வருவது, குடல் ஒரு பகுதி இல்லாமல் இருப்பது, குடல் வளராமல் இருப்பது என பல்வேறு பிரச்சினைகள் பச்சிளம் குழந்தைகளுக்கு கடந்த ஒரு மாதத்தில் ஏற்பட்டு இருந்ததாகவும், இது வரை 25 குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்டு ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் குழந்தைகள் வீட்டில் இருப்பதால் குறும்புதனமாக செய்து ஏற்படும் பாதிப்புகளையும் குழந்தைகள் அறுவை சிகிச்சை பிரிவு மூலம் சிறப்பாக கையாண்டு இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். ஒரே மாதத்தில் அதிகபட்சமாக குழந்தைகள் அறுவை சிகிச்சை இந்த முறை நடைபெற்று இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.