200 வது  ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ள மகேந்திர சிங் தோனி

13-வது ஐபிஎல் தொடரின் 37-வது லீக் போட்டி சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற இருக்கிறது. இதில் சென்னை அணியின் கேப்டனான தோனி விளையாடுவதன் மூலம் ஐபிஎல் தொடரில் 200 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை படைக்க இருக்கிறார்.

இதுவரை 199 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 23 அரை சதங்கள் அடித்து 4,568 ரன்கள் குவித்துள்ளார். இதில், 306 பவுண்டரிகளும், 215 சிக்ஸர்களும் அடக்கம். பெங்களூரு அணிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் எடுத்ததே தோனியின் தனிநபர் அதிகபட்சமாக உள்ளது.

தோனியை அடுத்து ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் என்ற வரிசையில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, சென்னை அணி வீரர் ரெய்னா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.