ஆனைமலை வட்டாட்சியர் அலுவலக கட்டிட பணிக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஆனைமலையில் வட்டாட்சியர் அலுவலகம் கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி, 475 பயனாளிகளுக்கு  ரூ.3.07கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் கஸ்தூரிவாசு, எட்டிமடை எ.சண்முகம், மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங், ஆனைமலை வட்டாட்சியர் வெங்கடேசன், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, கிணத்துக்கடவு பேருந்து நிலையம் அருகில் ரூ.1.20கோடி மதிப்பீட்டில் 122 கடைகளுடன் அமைக்கப்பட்ட வாரச்சந்தை கட்டிடத்தினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.