காய்கறிகளின் விலைகளை கணித்துள்ளது வேளாண் பல்கலைக்கழகம்

தக்காளி வெங்காயம் மற்றும் வெண்டைக்காய் ஆகிய காய்கறிகளின் விலைகள் நடப்பாண்டில் எப்படி இருக்கும் என்று வேளாண் பல்கலைக்கழகம் கணித்துள்ளது.

இதுகுறித்து வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தக்காளி வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் தோட்டக்கலை பயிர்களுக்கான இரண்டாவது முன்கூட்டிய அறிக்கையின்படி 2019-20 ஆம் ஆண்டு இந்தியாவில் தக்காளி 8.12 லட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 205.73 லட்சம் டன்கள் உற்பத்தியாகும் என்று கணக்கிட்டுள்ளது.

இந்தியாவின் மொத்த தக்காளி உற்பத்தியில் ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகா, மேற்கு வங்காளம், தெலுங்கானா, சட்டீஸ்கர் குஜராத் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் சேர்ந்து 71 சதவீதம் பங்களிக்கின்றது. தமிழ்நாட்டில் கிருஸ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் தக்காளி உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும்.

வர்த்த மூலங்களின்படி தற்போது கோயம்புத்தூர் சந்தைக்கு தக்காளியின் வரத்தானது நாச்சிபாளையம், கிணத்துகடவு, மாதம்பட்டி, செட்டிபாளையம் மற்றும் ஆலந்துறை ஆகிய பகுதிகளிலிருந்தும், திண்டுக்கல் சந்தைக்கு அதன் சுற்று வட்டார பகுதிகள் உடுமலைபேட்டை மற்றும் பழநி ஆகிய பகுதிகளிலிருந்தும் வருகிறது. தற்போது கர்நாடகாவிலிருந்து வரத்தொடங்கியுள்ள வரத்தானது டிசம்பர் 2020 வரை வரும். கர்நாடகாவிலிருந்து வரும் தொடர் வரத்தே தக்காளியின் தற்போது விலை குறைவிற்கு காரணமாகும்.

ஆனால், வடகிழக்கு பருவமழை காலங்களில் தக்காளி விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. கத்திரி வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் தோட்டக்கலை பயிர்களுக்கான இரண்டாவது முன்கூட்டிய அறிக்கையின்படி 2019-20 ஆம் ஆண்டு இந்தியாவில் கத்திரி 7.36 லட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 127.77 லட்சம் டன்கள் உற்பத்தியாகும் என்று கணக்கிட்டுள்ளது.

இந்தியாவின் மொத்த உற்பத்தியில் மேற்கு வங்காளம், ஒடிசா, பீகார், குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சேர்ந்து 69 சதவீதம் பங்களிக்கின்றது. தமிழ்நாட்டில் தர்மபுரி, கிருஸ்ணகிரி, திண்டுக்கல், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் கத்திரி அதிகளவில் பயிரிடப்படுகிறது. வர்த்த மூலங்களின்படி கோயம்புத்தூர் சந்தைகளுக்கு கர்நாடகா மாநிலம் மைசூரிலிருந்து அதிகமான வரத்தும் தமிழ்நாட்டின் அதன் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து குறைந்தளவு வரத்தும் வந்து கொண்டிருக்கிறது.

வெண்டை இந்தியாவில் 2019-20-ம் ஆண்டில் 5.19 லட்சம் எக்டர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு 63.71 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மேற்கு வங்காளம், குஜராத், பீகார், ஒடிசா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சேர்ந்து 60 சதவீதம் வெண்டை உற்பத்தியில் பங்களிக்கின்றது.

தமிழ்நாட்டில் சேலம், தேனி, தர்மபுரி, திருவள்ளூர் கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்கள் வெண்டை உற்பத்தியில் முன்னிலை வகிக்கின்றன. வர்த்தக மூலங்களின்படி, வெண்டை வரத்தானது, ஆலந்துறை, சேலம், ஒட்டன்சத்திரம் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளிலிருந்து வருகிறது.

இச்சூழலில் விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம் கடந்த 14 ஆண்டுகளாக ஒட்டன்சத்திரம் மற்றும் கோயம்புத்தூர் உழவர்சந்தைகளில் நிலவிய தக்காளி கத்திரி மற்றும் வெண்டை விலையை சந்தை ஆய்வுகள் மேற்கொண்டது. ஆய்வு முடிவின் அடிப்படையில் நவம்பர் – டிசம்பர் 2020 வரை தரமான தக்காளியின் பண்ணை விலை ரூ.17- முதல் ரூ.20- வரை, நல்ல தரமான கத்திரி கிலோவுக்கு ரூ.23- முதல் ரூ.25- ஆகவும் மற்றும் தரமான வெண்டை பண்ணை விலை ரூ.21- முதல் ரூ.23- வரை இருக்கும்.

மேலும்,தமிழ்நாட்டில், தொடர் பண்டிகை மற்றும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் வரும் மாதங்களில் காய்கறிகளுக்கு சாதகமான விலை கிடைக்கும் என நம்பப்படுகிறது.

எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில் விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர். மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தொலைபேசி எண்: 0422-2431405.