அக்டோபர் 4 முதல் பிக் பாஸ் சீசன் 4

தமிழில் 3 சீசன்கள் ஒளிபரப்பாகி ஹிட் அடித்த பிக்பாஸ் நிகழ்ச்சி மீண்டும் அக்டோபர் 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே இந்நிகழ்ச்சியின் மீது பல்வேறு விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டன. ஆனால் அவை அனைத்தையும் தனக்கான விளம்பரமாக மாற்றிக் கொண்டது பிக்பாஸ் நிகழ்ச்சி.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் ஒளிபரப்பாகி வந்த இந்நிகழ்ச்சி இந்தமுறை கொரோனா அச்சுறுத்தலால் அக்டோபரில் இருந்து ஒளிபரப்பு தொடங்க இருக்கிறது. மூன்று சீசன்களைப் போலவே இந்த முறையும் நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.

சமீபத்தில் பிக்பாஸ் 4-வது சீசனின் ப்ரமோ வீடியோக்கள் வெளியாகியிருந்த நிலையில் இம்முறை யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற தகவல்களும் கசியத் தொடங்கின. அதேபோல் இந்த முறை கொரோனா அச்சுறுத்தலால் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது உள்ளிட்ட சில மாற்றங்களும் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், பாடகர் ஆஜித், கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ், அனுமோகன், ரியோ ராஜ், சனம் ஷெட்டி உள்ளிட்டோர் இம்முறை போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படும் நிலையில் இவர்கள் அனைவரும் நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தபட்டிருப்பதாக தகவல் வெளியாகின.

தற்போது நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டா ஸ்டேட்டஸ் பகுதியில் தனி அறையில் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதேபோல் நடிகர் ரியோ ராஜூம் 4 சுவர்களுக்குள் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். இதனால் இவர்கள் இருவரும் ஒரே ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருக்கவும் வாய்ப்புகள் உண்டு.