31ஈழுவா தியா வகுப்பினர்களுக்கு சாதிச்சான்றிதழ்களை அமைச்சர்கள் வழங்கினர்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் அருணாச்சலா மஹாலில் ஈழுவா மற்றும் தியா வகுப்பினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்காக நன்றி தெரிவிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கேரள நீர்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் பேசுகையில் தெரிவித்ததாவது, எளியவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகின்றது.

அதன்படி, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு பகுதியில் வசிக்கும் ஈழுவா மற்றும் தியா வகுப்பினர்களை பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் சேர்ப்பதற்கு பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு வரப்பெற்றன. அதனை ஆய்வு செய்ததில், மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த செங்கோட்டை வட்டமும், திருவாங்கூர் – கொச்சி சமஸ்தானத்திலிருந்து பிரிக்கப்பட்டு தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட்டன.

அந்த சமஸ்தானத்தில் சலுகைகள் பெற்று வந்த சாதிகளுக்கு தமிழ்நாட்டிலும் அச்சலுகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, ஈழுவா வகுப்பு கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டத்தில் செங்கோட்டை வட்டத்திலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் ஈழுவா, தியா வகுப்பினரை சார்ந்த சங்க நிர்வாகிகள் என்னிடம் கோரிக்கை வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து, தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஈழுவா மற்றும் தீயா வகுப்பினருக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் மூலம், மாநிலத்தின் இதர பகுதிகள் மற்றும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் வாழும் ஈழுவா மற்றும் வகுப்பினருக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு சான்றிதழ் வழங்குவது குறித்தான கோரிக்கையின் மீதும்,  தீயா வகுப்பினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பு பட்டியலில் சேர்ப்பது குறித்தான கோரிக்கையின் மீது, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கை பெறப்பட்டது.

அதன் பின்னர், இதனை ஆய்வு செய்ய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் 27.07.2020 அன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் வாழும் ‘ஈழுவா’ வகுப்பினருக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பு சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கான ஆணையினையும், ‘தீயா’ வகுப்பினரை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கான ஆணையினையும் தமிழ்நாடு ஈழுவா தீயா சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகளிடம் வழங்கினார்கள்.

அதனடிப்படையில், கடந்த 09.09.2020 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை மாவட்டம், பேரூர் பகுதியில் வாழும் 25நபர்களுக்கு ‘ஈழுவா’ வகுப்பினருக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பு சான்றிதழ்களும்,  மதுக்கரை பகுதியில் வாழும் 3 நபர்களுக்கு ‘தியா’ வகுப்பினருக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பு சான்றிதழ்களும்,  வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக அனைத்து வட்டங்களிலும், ‘ஈழுவா’ ‘தீயா’ வகுப்பினருக்கு பிற்படுத்தப்பட்ட சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் ‘ஈழுவா மற்றும் தீயா’ வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் முன்னுரிமை பெறுவதற்கு பெரும் உதவியாகவும், அவர்களின் வாழ்க்கை தரம் உயரவும் பயனுள்ளதாகவும் அமையும். என சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி, கேரள நீர்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி ஆகியோர் 31 ஈழுவா தியா வகுப்பினர்களுக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பு சாதிச்சான்றிதழ்களை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ராசமணி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, கேரள மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பாபு, கே.டி.பிரசன்னன், தமிழ்நாடு மலையாளிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சோமன் மேத்யூ மற்றும் ஈழுவா தியா கூட்டமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.