“ஈழுவா” மற்றும் “தியா” வகுப்பினர்களுக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “ஈழுவா” மற்றும் “தியா” வகுப்பினருக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பு சான்றிதழ்களை சிறப்புத் திட்டங்கள் செயலக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ராசாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் பேசுகையில், ஈழுவா மற்றும் தீயா வகுப்பினர்களை பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் சேர்ப்பதற்கு பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு வரப்பெற்றன. அதனை ஆய்வு செய்ததில், மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த செங்கோட்டை வட்டமும் திருவாங்கூர்-கொச்சி சமஸ்தானத்திலிருந்து பிரிக்கப்பட்டு தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட்டன

அந்த சமஸ்தானத்தில் சலுகைகள் பெற்று வந்த சாதிகளுக்கு தமிழ்நாட்டிலும் அச்சலுகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து ஈழுவா வகுப்பு கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டத்தில் செங்கோட்டை வட்டத்திலும் பிற்படுத்தப்பட்ட வாகுப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் ஈழுவா தியா வகுப்பினரை சார்ந்த சங்க நிர்வாகிகள் ஈழுவா மற்றும் தீயா வகுப்பினர்களை பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் சேர்ப்பதற்கு என்னிடம் கோரிக்கை வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து, தமிழக முதல்வரிடம் நான் நேரில் சந்தித்து ஈழுவா மற்றும் தீயா வகுப்பினருக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக கோரிக்கை வைத்தேன்.

அதன் மூலம், மாநிலத்தின் இதர பகுதிகள் மற்றும் கோவை, நீலகிரி திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் வாழும் ஈழுவா மற்றும் வகுப்பினருக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு சான்றிதழ் வழங்குவது குறித்தான கோரிக்கையின் மீதும் தீயா வகுப்பினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பு பட்டியலில் சேர்ப்பது குறித்தான கோரிக்கையின் மீது, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கை பெறப்பட்டது. அதன் பின்னர், இதனை ஆய்வு செய்ய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழக முதல்வர் 27.07.2020 அன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் வாழும் “ஈழுவா” வகுப்பினருக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பு சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கான ஆணையினையும், “தீயா” வகுப்பினரை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கான ஆணையினையும் தமிழ்நாடு ஈழுவா தீயா சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

அதனடிப்படையில், இன்று (10.9.2020) கோவை மாவட்டம், பேரூர் பகுதியில் வாழும் 25 நபர்களுக்கு “ஈழுவா” வகுப்பினருக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பு சான்றிதழ்களும் மதுக்கரை பகுதியில் வாழும் 3 நபர்களுக்கு “தீயா” வகுப்பினருக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பு சான்றிதழ்களும், வழங்கப்பட்டது.