பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள் மூலம் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்களின் பயன்பெற பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராகவும், ஆண்டு வருமானம் ரூ.3,00,000 க்கும் மிகாமலும், விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு  மேற்படாதவராகவும், இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

பொதுகால கடன் திட்டம்/தனி நபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.  ஆண்டு வட்டி விகிதம் 6% விகிதத்திலிருந்து 8% வரை வசூலிக்கப்படுகிறது. பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின்கீழ் ஆண்டு வட்டி விகிதம்  5% ல், அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. சிறு கடன் வழங்கும் திட்டத்தின்கீழ் ஆண்டு வட்டி விகிதம் 4% ல் சுய உதவிக்குழு மகளிர் உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1 இலட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 இலட்சம் வரையும் வழங்கப்படுகிறது. சுயஉதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும்.  திட்ட அலுவலர் (மகளிர்திட்டம்) அவர்களால் தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

சிறு கடன் வழங்கும் திட்டத்தின்கீழ் ஆண்டு வட்டி விகிதம் 5% ல்  சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள ஆடவருக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.1 இலட்சம் வரையும், ஒரு குழுவிற்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.15 இலட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6% ல், கறவை மாடுகள் (2) வாங்க ரூ.60,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளில் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கியில் ஒப்படைக்க வேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.