கொரோனா அச்சுறுத்தலிலும் 53 மில்லியன் வசூலித்த ‘டெனெட்’

கொரோனா வைரஸ் நோய் உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் கூடும் மால்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பல இடங்கள் பல மாதங்களாக மூடப்பட்டிருந்தது. இதனால் புதிதாக வெளிவர இருந்த பல திரைப்படங்கள் வெளியாகாமல் முடங்கியது. சில படங்கள் ஒத்தி வைக்கப்பட்டது. சில படங்கள் ஓடிடி தளங்களில் வெளியானது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்துள்ள சில நாடுகளில் விதிமுறைகளுக்கு உட்பட்டு திரையரங்குகள் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது. அங்கு ‘எக்ஸ் மென்: தி ந்யூ ம்யூடண்ட்ஸ்’, கிறிஸ்டோபர் நோலனின் ‘டெனெட்’ ஆகிய படங்கள் முதலில் வெளியாகியுள்ளது. இதில் ‘டெனெட்’ படத்துக்கு அனைத்து நாடுகளிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தென் கொரியா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட 41 நாடுகளில் வெளியாகியுள்ள ‘டெனெட்’ திரைப்படம் ஐந்து நாட்களில் 53 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக தொகை என வார்னர் ப்ரோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வார்னர் ப்ரோஸ் நிறுவனத்தின் சேர்மேன் டோபி எம்மரிச் கூறும்போது, ”இது ஒரு அற்புதமான தொடக்கம். இதுபோன்ற எதிர்பாராத சூழல்களில் இந்த உலகளாவிய வெளியீட்டில் நாங்கள் ஓடுவது மாரத்தான் போட்டியில்தான் என்பதை நாங்கள் அறிந்தே வைத்திருந்தோம். எனவே, நாங்கள் எதிபார்த்ததை விட பெரிய சாதனை இது. வரும் வாரங்களில் இந்தப் படம் இன்னும் அதிக நாட்கள் ஓடும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார். வரும் செப்டம்பர் 3 அன்று இப்படம் அமெரிக்காவில் வெளியாகிறது.