கோவிட்-19 கேர் சென்டரை ஆய்வு செய்த கோவை ஆணையாளர்

கோவை மாநகராட்சி கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களை கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் கொடீசியா ஆகியவற்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சியிலுள்ள ஐந்து மண்டலங்களுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையாளிப்பதற்காக பாரதியார் பல்கலைக்கழக விளையாட்டு விடுதியில் சுமார் 450 படுக்கைகள் கொண்டு அமையவுள்ள கோவிட்-19 கேர் சென்டர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக மண்டல மாணவர் விடுதியில் சுமார் 200 படுக்கைகள் கொண்டு அமைக்கப்படவுள்ள கோவிட்-19 கேர் சென்டரை பார்வையிட்ட ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இம்மையங்களில் சுகாதார வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின் வசதி ஆகியவற்றை ஆய்வு செய்து, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு போதுமான வசதிகள் உள்ளதா என்பதை குறித்து ஆய்வு செய்தார்.

முன்னதாக கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட அரசினர் பொறியியல் கல்லூரியில் உள்ள முன்னால் மாணவர் சங்க ராஜலட்சுமி ஆடிடோரியத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு வகைபடுத்தும் மையத்தை தேர்வு செய்வதற்கான இடத்தை ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இவ்வாய்வின் போது மேற்கு மண்டல உதவி ஆணையர் சரவணன், செயற்பொறியாளர் சரவணக்குமார், உதவி பொறியாளர் ஜெகதீஸ்வர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.