பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை குணமடைந்து மீண்டும் பாட வேண்டுமென அவரது ரசிகர்கள் கூட்டு பிரார்த்தனை

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை குணமடைந்து மீண்டும் பாட வேண்டும் என அவரது ரசிகர்கள் இணைந்து கோவையில் சர்வ சமய கூட்டு  பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய மொழிகளில், பல ஆயிரம் பாடல்கள் பாடி இந்திய சினிமா ரசிகர்களை கவர்ந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் நலமுடன் பாடவேண்டும் என்பதற்காக பாடும் நிலாவே எழுந்து வா என தமிழகத்தில் திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் கடந்த வாரம் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

இந்நிலையில் தற்போது அவரது உடல் நிலை சீராகி வருவதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் சரண் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கோவையில் உள்ள அவரது ரசிகர்கள் இதற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கூட்டு பிரார்த்தனை செய்தனர். சற்குரு அறக்கட்டளை சார்பாக க்ளஸ்டர் ஸ்டுடியோவில் நடைபெற்ற இதில் ஜாதி, மத, இன இல்லாமல் அனைவரும் ஒன்றுகூடிக் கலந்து, பாடும் இசையே மீண்டும் எழுந்து பாட வா என இசைக்கலைஞர்கள் இணைந்து அவர் பாடிய பாடல்களை உருக்கமாக பாடி பிரார்த்தனை செய்தனர். இது அங்கு கூடியிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. க்ளஸ்டர் திரைப்பட கல்லூரி முதல்வர் அரவிந்தன் மற்றும் சுதாகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற, இதில் கண்ணன் சுவாமிகள், பாஸ்டர் சாம் டேனியல் ஆகியோர் இணைந்து சர்வ சமய  பிரார்த்தனை செய்தனர். சன் சி தொழில் கல்லூரி, தமிழ் அறக்கட்டளை, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அறக்கட்டளை ஆகியோர் இணைந்து நடத்திய இதில், ராஜசேகர், சதாசிவம், கமலக்கண்ணன், கணபதி தாஸ், சேகர், எடிசன் ஆர்க்கெஸ்ட்ரா அலெக்ஸ், காளியப்பன், கனக சுப்ரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.