சிறுபான்மையற்ற, சுயநிதி பள்ளிகளில் சேர்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்திலுள்ள சிறுபான்மையற்ற, தனியார் சுயநிதி பள்ளிகளில், எல்கேஜி அல்லது முதல் வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 25 வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் , 2009 பிரிவு 12(1) (உ)- இன்படி அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்புகளில் குறைந்த பட்சம் 25 சதவிகிதம் இட ஒதுக்கீட்டின்படி சேர்க்கை வழங்கப்பட வேண்டும்.

விண்ணப்பிக்கும் குழந்தைகளின் பெற்றோர் பள்ளி கல்வித்துறையின் இணையதளத்தில் (rte.tnschools.gov.in) இணைய வழியாக ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 25 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது புகைப்படம், பிறப்பு சான்று அல்லது பிறப்பு சான்றிதழுக்கான பிற ஆவணம், இருப்பிட சான்று, வருமான சான்று (ஆண்டு வருமானம் ரூ 2 லட்சத்திற்கும் கீழ் உள்ளோர்), வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரில் முன்னுரிமை கோரும் நபர்கள் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட நிரந்தர ஆவணங்களின் நகல், ஜாதி சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.