74வது சுதந்திர தினம் : கோவையில் கொரோனா தடுப்பு பணி மேற்கொண்ட 90 பேருக்கு விருது!

இந்திய நாட்டின் 74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியை மேற்கொண்ட 90 பேருக்கு விருதுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

கோவை : நாட்டின் 74வது சுதந்திர தினமான இன்று (15.8.2020) கொண்டாடப்பட்டு வருகிறது. கோவையில் வழக்கமாக வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைப்பார். இதனை தொடர்ந்து அணிவகுப்பு மரியாதை, கலைநிகழ்ச்சிகள்,  நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் மற்றும் தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவதும், ஆயிரக்கணக்கான மக்கள்  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும் வழக்கம்.

ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு சுதந்திர தினம் எளிமையாக கொண்டாடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் முன்னதாகவே தெரிவித்திருந்தார்.

அதன்படி, இன்று (15.8.2020) சுதந்திர தினம் எளிமையாக கொண்டாட்டப்பட்டது. இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி வ.உ.சி மைதானத்தில் கொடியேற்று வைத்தார். இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் அணி வகுப்பு மரியாதை கொடுத்தனர்.

தொடர்ந்து, கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் தங்களை அற்பணித்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், இ.எஸ்.ஐ மருத்துவமனை, கோவை அரசு மருத்துவமனை, சுகாதாரத்துறை (கோவை), காவல்துறை, மாநகராட்சி, போக்குவரத்து தூறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 90 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.