வ.உ.சி மைதானத்தில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை

கோவையில் நாளை (15.8.2020) நடக்கும் 74வது சுதந்திர தின விழாவையொட்டி காவல்துறையின் அணிவகுப்பு ஒத்திகையில் அனைத்து காவலர்களும் முகக்கவசம் அணிந்து இருந்தனர். நாளை சுதந்திர தினவிழா வ.உ.சி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று தேசிய கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ள உள்ளார். இதனை தொடர்ந்து சுதந்திர தினவிழா இறுதி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி, கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. காவல் ஆணையாளர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள், தலைமையில் ஒத்திகை தினந்தோறும் காலை, மாலைகளில் நடைபெற்று வருகின்றது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து காவலர்களும் முகக்கவசம் அணிந்தும், ஒன்றரை அடி இடைவெளி விட்டும் ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், தேசிய மாணவர்படை மாணவர்களின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.