அரசு அறிவிப்புகளை  மாவட்ட நிர்வாகத்தினர் முறையாகப் பின்பற்றுவதில்லை

– இந்திய மெடிக்கல் அசோசியேஷன் சங்கம் குற்றச்சாட்டு

தமிழக அரசு வெளியிடும் அறிவிப்புகளை மாவட்ட நிர்வாகத்தினர் முறையாகப் பின்பற்றுவதில்லை என இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை இந்திய மருத்துவக் கவுன்சில் அரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது,

ஏறக்குறைய 85விழுக்காடு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வரும்போது அவர்களால் நோய் மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. உள்நோயாளிகளாக, அறுவை சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை அளிக்கும் பொழுது நோயாளிகளுக்கு நோய் தொற்று உள்ளதா எனக் கண்டறிய வேண்டிய நிர்பந்தம் மருத்துவர்களுக்கு உள்ளது.

ஆனால் கிராம, ஊராட்சி மற்றும் நகராட்சிகளில் போதிய அளவு தனியார் பரிசோதனை மையங்கள் இல்லாததால், அரசு  மையங்களுக்கு அனுப்ப வேண்டிய சூழலும், இதனால் அரசுக்கு அதிக பணிச்சுமையும், ரிசல்ட் வருவதில் கால தாமதமும் ஏற்படுகிறது.

மருத்துவப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் பாதுகாப்பு முறைகளும் வழிகாட்டுதல்களும் நோயாளிகளின் கட்டணத்தில் வசூலிக்கப்படுகின்றது. மேலும் பணியாளர்கள் பற்றாக்குறை என்பது ஒரு பெரிய பிரச்னை, இந்த நிலையில் அரசு நடைமுறையிலுள்ள சாத்தியமில்லாத கட்டணங்களை செயல்படுத்துவதால், முழுமையான சிகிச்சை அளிக்க கடினமாக உள்ளது.

அத்துடன்,  அரசு பிறப்பித்துள்ள விதிமுறைகளை ரெவின்யூ அதிகாரிகள் சரிவரப் பின்பற்றாமல் ஒரு மருத்துவமனையில் கொரோனா நோயாளி வந்து சென்றால் 14 நாட்கள் அல்லது 20 நாட்கள் என கால நிர்ணயம் இல்லாமல் மருத்துவமனைகளை தற்காலிகமாக மூடி செல்கின்றனர். இது பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துகிறது. எனவே, தமிழக அரசு விதித்துள்ள முறையான அடக்குமுறைகளை அதிகாரிகள் சரிவரப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.