உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கான மத்திய அரசுத் திட்டம்

பிரதமரால் 2020 – 2021 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட “ஆத்மநிர்பார் பாரத் அபியான்” திட்டத்தின் ஒரு பகுதியாக அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம்” அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் 2020 – 2021 ஆம் ஆண்டு முதல் 2021 – 2025 வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் மத்திய அரசின் 60 சதவிதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதிப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.

இத்திட்டம், “ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள்” என்ற அணுகுமுறையில் செயல்படுத்தப்படும். மத்திய அமைச்சரவை பதப்படுத்தும் தொழில் முறை வழியாக தமிழ் நாட்டில் வேளாண்மை விற்பனை துறை மூலம் இத் திட்டம் செயல்படுத்தப்படும்.

மாவட்ட அளவில் ஆட்சியர் அவர்களின் தலைமையின் கீழ் நியமிக்கப்படும் குழுவின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான  இத்திட்டத்தின் மூலம் தனிநபர் மற்றும் குழு அடிப்படையில் ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனம் தொடங்குதல், பொது உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருதல், வர்த்தகம் மற்றும் சந்தைப்படுத்தல், தொழில்நுட்பப் பயிற்சிகள் போன்றவைகளுக்கு நிதி உதவி வழங்கப்படும்.

மேலும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளும் நிதி உதவி வழங்கப்படும். ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற அடிப்படையில் மாவட்ட வாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விளை பொருட்களை பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபட உள்ள சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

திட்டத்தின் மூலம் ஒரு சிறிய உணவு பதப்படுத்தும் நிறுவனம் தகுதியான திட்ட மதிப்பு 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் ஐந்து லட்சம் வரை நிதி உதவி பெற்று பயன்பெறும் வாய்ப்பு உள்ளது மற்றும் சந்தைப்படுத்துவதற்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும் மேலும் சில உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் உதவியுடன் தொழில் கடன் தொகை வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.

கோவை மாவட்டத்தில் ஏற்கனவே இயங்கிவரும் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் மாவட்ட வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட விளைபொருட்கள் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் புதியதாக ஈடுபட உள்ள நிறுவனங்கள் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளை பெற்று பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, கோவை மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) தொடர்பு கொண்டு கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.