விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைக்க தடை

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி அடுத்த சனிக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் நோய் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கும், ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதிக்க இயலாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், நோய் பரவலை தடுக்கும் விதமாக, பொதுமக்கள் நலன் கருதி பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கோ, ஊர்வலமாக எடுத்து செல்வதற்கோ, நீர்நிலைகளில் கரைப்பதற்கோ அனுமதிக்க இயலாது. எனவே வீடுகளிலேயே கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கு, சந்தைகளுக்கு செல்பவர்கள், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளி ஆகியவற்றை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சிறிய கோவில்களில் வழிபாடு செய்யும் பொழுதும் கண்டிப்பாக சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.