இடைத்தரகர்களால் இறைச்சியாகும் நாட்டு மாடுகள்

கொரோனா ஊரடங்கின் காரணமாக தமிழகம் எங்கும் பரவலாக மாட்டு சந்தைகள் மூடப்பட்டுள்ளன. வழக்கமாக மாட்டு சந்தைகளில்உழவுக்காகவும் பால் உள்ளிட்ட இதர தேவைகளுக்காகவும் விவசாயிகள் வாங்கிக்கொள்வர்.

ஆனால், விவசாயிகள் தற்போதுள்ள சூழலில் சந்தைகள் இல்லாத நிலையில் மாடுகளை இடைத்தரகர்களுக்கு விற்கின்றனர். பெரும்பாலும் இடைத்தரகர்கள் கூடுதலான பணம் கொடுத்து கால் நடைகளை தங்களின் இறைச்சி வியாபாரத்திற்காக கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தமிழ்நாட்டின் விற்பனைக்காகவும் இறைச்சி விறனை நிலையங்களுக்காகவும் தந்துவிடுகின்றனர்.

தற்பொழுது மீன் போன்றவற்றில் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், மாட்டுக்கறிக்கு மவுசு கூடி இருக்கின்றன. இதன் விலையும் உயர்ந்துள்ளது. 250 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மாட்டுக்கறியின் விலை தற்போது 400 ரூபாய்க்கு விற்கப்படுவதால் கூடுதலான தொகை கொடுத்து விவசாயிகளிடமிருந்து இடைத்தரகர்கள் மாடுகளை வாங்கிச் செல்கின்றனர்.

காங்கேயம் உள்ளிட்ட நாட்டு ரக மாடுகள் இடை தரகர்களின் கையில் சிக்கி அனைத்தும் அறுப்புக்கு செல்கின்றன. எனவே நாட்டு மாடுகளின் அழிவை கருத்தில்கொண்டு சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக இயங்கும் வகையில் சந்தைகளை திறக்க அனுமதி வேண்டும் என கால்நடை வளர்ப்பாளர்கள் விவசாயிகள் மற்றும் கொங்கு கோசாலா போன்ற தரப்பின் சார்பாக கோரிக்கை எழுந்து உள்ளது.

குறிப்பாக கொங்கு கோசாலா என்னும் அமைப்பைச் சார்ந்த சிவக்குமார் கடந்த 7 ஆண்டுகளாக நாட்டு மாடு அறுப்புக்கு செல்வதைத் தடுத்து நிறுத்தி விவசாயிகளிடமிருந்து நேரடியாக கால்நடை வளர்ப்பவர்களிடம் நாட்டு மாடுகளை கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

இதுவரை கடந்த ஏழு ஆண்டுகளாக சுமார் 5000க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளை காப்பாற்றி இருக்கும் இவரது குழு இந்த பொது ஊரடங்கின் பொழுது இணையத்தின் வாயிலாக சுமார் 500க்கும் மேற்பட்ட நாட்டு ரக மாடுகள் இறைச்சியாவதை தடுத்து நிறுத்தி கால்நடை வளர்ப்பவர்களுக்கும் கொண்டு சேர்த்திருக்கிறது