கோவையில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

கொரோனா தொற்று ஏற்பட்டு கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தெக்கலூர் பகுதியை சேர்ந்த 26 வயதான கர்ப்பிணி பெண்ணுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை அவருக்கு பிரசவலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த பெண்ணுக்கு 3.3 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக ஆண் குழந்தை பிறந்தது.

இதுகுறித்து இ.எஸ்.ஐ மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ”தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதுவரை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 16 கர்ப்பிணி பெண்களும் நலமாக உள்ளனர்.” என்றார்.