சுற்றுச்சூழல் அவசர சட்டம்  மக்களுக்கு எதிரானது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்

கோவை சிரியன் சர்ச் சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலத்தில்,  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சுற்றுச்சூழல் அவசர சட்டம் விவசாயிகள் மற்றும் மக்களுக்கு எதிரானது என குற்றம்சாட்டியுள்ளார்.

இதில் பேசிய இவர், மத்திய, மாநில அரசுகள் கொரோனா தொற்று விவகாரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வில்லை எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இந்தளவு பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்காது என குறிப்பிட்டார்.

ஊரடங்கு நீடிக்கப்பட்டால் பாதிக்கப்படும் மக்களை பற்றி மத்திய, மாநில அரசுகளுக்கு கவலையில்லை எனவும், ஊரடங்கினால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், ஒவ்வொரு குடும்பத்திற்கு மாநில அரசு 5 ஆயிரம் ரூபாயும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசு 7 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா நெருக்கடி சூழலை பயன்படுத்தி எதேச்சை அதிகாரம் கொண்ட அவசர சட்டங்களை மக்களுக்கு எதிராக மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது எனவும், மின்சார வரைவு மசோதாவினை ஏற்க மாட்டோம் என தமிழக முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் எனவும், சுற்றுச்சூழல் அவசர சட்டம் விவசாயிகள் மற்றும் மக்களுக்கு எதிரானது எனவும் கூறினார்.

மேலும் மத்திய அரசின் தவறான திட்டங்கள் தொடர்பாக ஜனநாயக ரீதியாக கருத்துகள் சொல்ல முடியவில்லை எனவும், கருத்து சொல்பவர்கள் மிரட்டப்படுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் பாலன் இல்லம் மற்றும் மூத்த தலைவர் நல்லகண்ணு குறித்து இழிவான விமர்சனம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஆயிரக்கணக்கில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமல்படுத்தப்படுகிறது எனவும், இந்தியாவில் சர்வாதிகார பாசிச ஆட்சி நடைபெறுகிறது. இதற்கு அதிமுக அரசு துணை போகிறது எனவும் முத்தரசன் குற்றம்சாட்டினார்.