கோவையில் “பல்ஸ் ஆக்ஸிமீட்டர்’ வழங்க திட்டம்

கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பை கண்டறியும் வகையில் ஊரகப் பகுதிகளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு “பல்ஸ் ஆக்ஸிமீட்டர்’ வழங்க சுகாதாரத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் தெரிவித்த சுகாதாரத் துறை அதிகாரிகள், தற்போது அறிகுறிகள் இல்லாமல் கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்படுவதால் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் மூலம் எளிதாக கொரோனா பாதிப்பினை தெரிந்துகொள்ள முடியும் என்பதால் கோவை மாவட்டத்துக்கு 1,400 பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் ஊரகப் பகுதிகளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு பல்ஸ் ஆக்ஸி மீட்டர் வழங்கப்படும் என்றனர்.

மேலும் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு சளி மாதிரி பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டு வருகிறது. இதன் முக்கிய அறிகுறிகளாக மூச்சுத்திணறல், சுவாசப் பிரச்னைகள் குறிப்பிடப்படுகிறது. கொரோனா நோய்த் தொற்று 90 சதவீதத்துக்கும் மேல் நுரையீரலைத் தாக்குகின்றன. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

நுரையீரல் பாதிப்பினை எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் கண்டறிய முடியும். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லாமல் “பல்ஸ் ஆக்ஸிமீட்டர்’ மூலம் வீடுகளிலே நுரையீரல் செயல்பாடு குறித்து அறிந்துகொள்ள முடியும். இதற்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் உதவுகிறது.

நுரையீரல் செயல்பாட்டினைப் பொறுத்தே உடலில் ஆக்ஸிஜன் அளவு காணப்படும். நுரையீரலின் செயல்பாடு சீராக இருந்தால் உடலில் ஆக்ஸிஜன் அளவு 99 முதல் 100 வரை இருக்கும். பல்ஸ் ஆக்ஸி மீட்டரில் ஆக்ஸிஜன் அளவு 94க்கு கீழ் குறையும் போது நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அப்படி குறைந்தால் உடனடி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இது கொரோனா நோய்த் தொற்றாலும் ஏற்பட்டிருக்கலாம் அல்லது வேறு ஏதாவது பிரச்சினையாகவும் இருக்கலாம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

ஆனால் ஆக்ஸிஜன் அளவு 94க்கு கீழ் குறையும் போது உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது. இவர்களுக்கு கொரோனா பாதிப்பில்லை என்றால் 14 நாள்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் 14 நாள்களில் உடலில் ஆக்ஸிஜன் அளவை அறிந்துகொள்ளும் வகையில் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.