சரியான முடிவு..!

ஒரு கப்பலில் தம்பதிகள் பயணம் செய்து கொண்டுள்ளனர். அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரே ஒருவர் தப்பிக்க மட்டும் படகு ஒன்று இருக்கிறது. மனைவியை பின்னே தள்ளிவிட்டு கணவன் மட்டும் அந்த படகில் தப்பிச் செல்கிறான்.

விழும் கப்பலின் விளிம்பில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக இந்த இடத்தில் என்ன சொல்லியிருப்பார்? என்று மாணவர்களை நோக்கி ஆசிரியர் கேட்டார்.

அனைத்து மாணவர்களும் பல வகையான பதில்களை சொன்னார்கள். ஆனால் ஒரு மாணவன் மட்டும் அமைதியாக இருந்தான். அவனை பார்த்த ஆசிரியர் ஏன் நீ மட்டும் அமைதியாக இருக்கிறாய்? என்றார்.

அதற்கு அந்த மாணவன், நம்ம குழந்தைய பத்திரமா பாத்துக்கோங்கன்னு சொல்லியிருப்பாங்க டீச்சர்னு பதில் கூறினான்.

ஆசிரியர் எப்படிப்பா கரெக்ட்டா பதில் சொன்ன? உனக்கு முன்னாடியே இந்த கதை தெரியுமா? எனக் கேட்டார். அதற்கு அந்த மாணவன், இல்லை டீச்சர், என் அம்மாவும் சாகுறதுக்கு முன்னாடி இதையேதான் சொன்னாங்க என்றான்.

நீண்ட நேர அமைதிக்கு பிறகு, ஆசிரியர் கதையை தொடர்ந்தார். தனி ஆளாக அந்த பெண் குழந்தையை அந்த ஆண் வளர்த்தார். அவருடைய மரணத்தின் பின்னர் பல வருடங்கள் கழித்து அந்த பெண் தனது தந்தையின் டைரியை பார்க்க நேர்ந்தது.

தாய்க்கு உயிர்க்கொல்லி நோய் இருந்திருப்பது அப்போதுதான் அவளுக்கு தெரிய வந்தது. கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார். உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும்.

நான் என்ன செய்ய? நமது பெண்ணை வளர்த்தெடுக்க நான் மட்டுமே தப்ப வேண்டியிருந்தது. கதையை இத்தோடு முடித்துவிட்டு அந்த ஆசிரியர் கூறினார். வாழ்க்கையில் நல்லது கெட்டது எல்லாமே நடக்கும்.

எல்லாவற்றிற்கும் காரணம் இருக்கும். ஆனால் சில நேரங்களில் நம்மால் புரிந்துக்கொள்ள முடியாமல் போகலாம்.

அதனால் நாம் ஆழமாக யோசிக்காமலோ, சரியாக புரிந்து கொள்ளாமலோ எந்த முடிவிற்கும் வந்து விடக்கூடாது.