நீலகிரியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (10.7.2020) தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் 447 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்கள்.

மத்திய அரசின் நிதியுதவியுடன், கடந்த 2019-ஆம் ஆண்டில், இராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நீலகிரி, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.

அதன்படி, இராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் 10 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

அந்த வகையில், 11-வது மருத்துவக் கல்லூரியாக நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படவுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். இப்புதிய அரசு மருத்துவக் கல்லூரி நிறுவிட, 447 கோடியே 32 லட்சம் ரூபாய் அனுமதித்து நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசின் பங்களிப்பாக 195 கோடி ரூபாய் நிதியும், தமிழ்நாடு அரசின் பங்களிப்பாக 130 கோடி ரூபாய் நிதியுடன், கட்டடங்கள் கட்டுவதற்காக கூடுதலாக 122 கோடியே 32 லட்சம் ரூபாய் நிதியும் வழங்கப்படும். முதற்கட்டமாக தமிழ்நாடு அரசால் 110 கோடி ரூபாய் நிதியும், மத்திய அரசால் 50 கோடி ரூபாய் நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரிக் கட்டடங்கள் 141 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மருத்துவமனைக் கட்டடங்கள் 130 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், குடியிருப்பு மற்றும் விடுதிக் கட்டடங்கள் போன்றவை 175 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்படும். நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி 150 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் நிறுவப்படும்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயணபாபு, மருத்துவக் கல்வி துணை இயக்குநர்  டாக்டர் சபிதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.