நீரிழிவு நோயாளிகளுக்கான ‘பிரெட்பாய்ஸ்’ சேவை

கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் மனம் தளராமல் நீரிழிவு நோயாளிகளுக்கென கோவையை சேர்ந்த இளைஞர் உருவாக்கிய  ஆரோக்கியமான நூறு சதவீத கோதுமை ரொட்டி மற்றும் நாட்டுசர்க்கரை தேங்காய் பன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

நாமக்கல் மாவட்டம் அரியாகவுண்டம்பட்டி எனும் சிறிய கிராமத்தை  சேர்ந்தவர் விஜயகுமார். ஓட்டல் மேனேஜ்மெண்ட்டில் பட்டபடிப்பு முடித்த இவர் தமிழகத்தில் பல்வேறு நட்சத்திர ஓட்டல்களில் பணியாற்றி கோவையில் சுயமாக தொழில் துவங்கும் நோக்கில்  ப்ரெட் பாய்ஸ் எனும் நிறுவனத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துவக்கினார். ரொட்டி, பிஸ்கெட் மற்றும் புதிய வகை உணவு தயாரிப்புகளில் கவனம் செலுத்தி பலரின் பாராட்டையும் பெற்ற இவர், திருமண நிகழ்ச்சிகள், பிறந்தநாள் விழாக்களில் இவரின்  பிரத்யேக உணவு வகைகள் தனி முத்திரையை பதித்து வந்தார்.

இந்நிலையில் உலகம் முழுவதையும் புரட்டி போட்ட கொரோனா தாக்கத்தால் இவரது நிறுவனம் பாதிக்கப்பட்டுள்ளது. மனம் தளராத இவர் முழு ஊரடங்கு நேரத்தில், பொதுமக்களுக்கு கோவை ஆவாரம்பாளையம் கோ இண்டியா அருகில் உள்ள தமது பணிமனையில் சொந்தமாக ப்ரெட் தயாரித்து இலவசமாக வழங்கி வந்தார். தொடர்ந்து ப்ரெட் தயாரிப்பில் கவனம் செலுத்திய இவர் இவரது குழுவினருடன் இணைந்து நீரிழிவு நோயாளிகளுக்கென பிரத்தேயக கோதுமை ரொட்டி மற்றும் தேங்காய் பன்னை உருவாக்கியுள்ளார். சாதாரணமாக தயாரிக்கப்படும் இந்த வகை ரொட்டிகளில் சர்க்கரை மற்றும் மைதா பயன்படுத்துவதால் சர்க்கரை நோயாளிகள் இதனை ருசிக்க முடியாமல் இருந்தனர். இந்நிலையில் தரமான நாட்டு சர்க்கரை மற்றும் நூறு சதவீத தரமிக்க கோதுமை கொண்டு தயாரிக்கப்படும் ப்ரெட் மற்றும் தேங்காய் ரொட்டிகள் நீரிழிவு நோயாளிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இது குறித்து அவர் பேசுகையில் தற்போதைய கொரோனா பாதிப்பு நீரிழிவு நோயாளிகளை அதிகம் பாதிக்கும் என்பதால் அவர்களுக்கென பிரத்யேக இந்த ரொட்டியை உருவாக்கி உள்ளதாகவும் முழுக்க தரமான பொருட்களுடன் உருவாக்கிய இந்த தேங்காய் கோதுமை ரொட்டியை அனைவரும் குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் விரும்பி சுவைத்து வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து அவர், தம்மை போன்ற சொந்த நாட்டில் சுய தொழில் செய்யும் இளைஞர்களை அரசு ஊக்குவிக்க முன் வரவேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.

காந்திபுரம் க்ராஸ்கட் சாலையில் உள்ள ஸ்ரீதேவி சில்க்ஸ் எதிரில் இவரது ப்ரெட் பாய்ஸ் கிளையில் இந்த வகை கோதுமை ப்ரெட் மற்றும் தேங்காய் பன், தானிய வகை நொறுக்கு தீனிகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.