எஸ்.என்.ஆர். கல்லூரியின் “திருப்பூர் ஹெல்த் ஹீரோஸ்”  செயலி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் இந்திய தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு, திருப்பூர் யங் இந்தியன்ஸ், திருப்பூர் மாநகராட்சி ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிந்துகொள்ளும்  “திருப்பூர் ஹெல்த் ஹீரோஸ்” செயலி திருப்பூர் ஆட்சியர் வளாகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கல்லூரியின் கணிப்பொறியியல் துறை இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் கோகுல் மற்றும் அஸ்வின் ஆகியோர் தங்களது பேராசிரியர்கள் உதவியுடன் உருவாக்கிய இச்செயலியை தமிழகக் கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிமுகம் செய்து வைத்தார்.

இவரோடு திருப்பூர் ஆட்சியர் விஜய கார்த்திகேயன், திருப்பூர் யங் இந்தியாவின் தலைவர் கதிரேசன் மற்றும் எஸ். என். ஆர். அறக்கட்டளையின் மக்கள் தொடர்பு மேலாளர் பிரகதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கொரோனா தொற்று மற்றும் பாதிக்கப்பட்ட நபர்கள் தாங்கள் எவ்வாறு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் , இவர்களைச் சார்ந்தவர்கள் எங்கெங்கு பயணிக்கிறார்கள் என்பதையும் மேப் மூலம் கண்காணிக்கும் வகையில் இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

தொற்று உள்ளவர்களுக்கு அவசர உதவி எண், அன்றாடத் தேவைகளுக்கான மருத்துவ உதவி மற்றும் மளிகைப் பொருட்கள் மிக விரைவாகக் கிடைக்க இச்செயலி கூடுதல் செயல்பாடுகளைக் கொண்டது. சேமித்துவைக்கப்பட்ட தரவுத் தகவல்களைக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களும் அவரைச் சார்ந்தவர்களும் சிறிது நேரம் தங்கள் மொபைல் போனை அணைத்து வைத்திருந்தாலும் மற்றும் எல்லைக்குட்பட்ட அவர்களை பற்றிய தகவல்களை புவி இருப்பிடம் கொண்டு சுகாதாரத்துறையிடம் தெரிவித்துவிடும் இச்செயலியை , ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் கணிப்பொறியியல் துறை உதவிப்பேராசிரியை ரதி மேற்பார்வையின் கீழ் மாணவர்கள் வடிவமைத்தனர்.

இதற்கு உறுதுணையாய் திகழ்ந்த அனைவரையும் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணஸ்வாமி , துணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் , கல்லூரியின் முதல்வர் அலமேலு, ஆராய்ச்சி மையத்தின் தலைவர்கள் கணேஷ் மற்றும் ராம்குமார் கணிப்பொறியியல் துறை தலைவர் கிரேஸ் செல்வராணி ஆகியோர் பாராட்டினர்.