மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவ காற்றின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்றின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 48 மணி நேரத்தில் சென்னையின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவலாவில் 3 செ.மீ மழையும், தேக்கடியில் 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், பேச்சிப்பாறை, இரணியல், தேனி மாவட்டம் பெரியார், நீலகிரி மாவட்டம் நடுவட்டம், கூடலூர் பஜார், கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சின்னக்கல்லார் பகுதிகளில் தலா ஒரு செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை, என குறிப்பிடப்பட்டுள்ளது.